Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிரார்த்திக்கவும் : இந்துமாமன்றம் கோரிக்கை

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, சகல இந்து மக்களும் நாளை பிரார்த்தனையில் ஈடுபடவேண்டுமென அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

‘தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளமை நீதிக்கும் நியாயத்திற்கும் முரணானதென்பதை கைதிகளின் உறவினர்கள் பலர் மீண்டும் மாமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

இவர்களை தீபாவளிக்குமுன் இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மாமன்றம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

நவம்பர் 7ஆம் திகதிக்கு முன் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி தந்த உறுதிமொழியைத் தொடர்ந்து கைதிகளின் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாவிட்டால் அக்கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க நேரிடும்.

அரசியல் கைதிகள் தீபாவளிக்கு முன் தங்கள் குடும்பங்களுடன் இணைய வழிவகுக்கவேண்டும் என இந்நாட்டு இந்து மக்களின் சார்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சகல அரசியல் தலைவர்களுக்கும் பகிரங்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

இதை மனிதாபிமான முறையில் நல்லாட்சியின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் தாமதமின்றி தீர்மானிக்க வேண்டும்.

இந்த அரசியல் கைதிகளுக்கு உடன் விமோசனம் கிட்ட இறையருள் வேண்டி சகல இந்து மக்களும் நாளை வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் இதற்கு சகல இந்து ஆலய தர்மகர்த்தாக்களும், மாமன்றத்தின் அங்கத்துவ சங்கங்களும் வழிவகுக்கவேண்டும் எனவும் விநயமாக மாமன்றம் வேண்டுகோள் விடுக்கின்றது.

அத்துடன், நாளை நண்பகல் 12.30 மணிக்கு அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையகத்திலும் விசேட வழிபாட்டு பூஜை நடைபெறும்.

கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டு அவர்கள் உண்ணாவிரதத்தை மீண்டும் ஆரம்பித்தால் இந்த நாட்டு இந்து மக்களும் அவர்களுக்கு ஆதரவு தந்து உண்ணாவிரதத்தில் இணையவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். அத்துடன், இந்த நாட்டு இந்து மக்கள் தீபாவளியைக் கொண்டாடும் நிலையில் இருக்கமாட்டார்கள் எனத் தெரிவிப்பதுடன், எமது சகோதர – சகோதரிகள் கண்ணீருடன் இருக்க அரசாங்கமோ அரசாங்கத்தைச் சார்ந்த எவருமோ தீபாவளியைக் கொண்டாட எந்த நடவடிக்கையும் எடுப்பதையிட்டு இந்நாட்டு இந்து மக்கள் எந்தவித திருப்தியும் அடையமாட்டார்கள்.

மாறாக, இன்னும் வேதனையடைவர் என்பதையும் அரசு எந்தவித கொண்டாட்டமோ களியாட்ட நிகழ்வோ ஏற்பாடுசெய்தால் எந்த இந்து மகனும் கலந்து கொள்ளமாட்டான் என்பதையும் இந்து மக்கள் சார்பில் தெரிவிக்கின்றோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

என்று அகில இலங்கை இந்துமா மன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.