Breaking News

இராணுவத்திடம் உள்ள காணிகளை விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு ஆராய்கிது - சுவாமிநாதன்

வடக்கு, கிழக்கில் அடுத்த வருடம் 6 ஆயிரம் காணிகளை விடுவிக்க அரசு தீர்மானித்துள்ள நிலையில், எந்தெந்தக் காணிகளை விடுவிப்பது என்பது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் ஆராய்ந்து வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.


பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்ததன் பின்னரே எந்தெந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என்பது தொடர்பாகத் தெளிவாகக் குறிப்பிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் 6 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுக்க அரசு விடுத்த அறிவிப்பு குறித்து வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், "வடக்கு, கிழக்கில் அடுத்த வருடம் 6 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இதில் 6 ஆயிரம் காணிகள் என்று குறிப்பிடுவதைவிட பெருந்தொகையான காணிகள் விடுவிக்கப்படும் என்று குறிப்பிடலாம்.

இருப்பினும், அந்தக் காணிகள் எவை என இதுவரை இனங்காணப்படவில்லை. எந்தெந்த காணிகளை விடுவிப்பது என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் ஆராய்ந்துவருகின்றனர். விடுவிக்கப்படவேண்டிய காணிகள் எவை என்பதை அவர்கள் குறிப்பிட்ட பின்னரே அது தொடர்பாக தெளிவாகக் குறிப்பிட முடியும்.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில் யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குளங்களைப் புனரமைத்து, விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளும் ஜனவரியில் ஆரம்பிக்கப்படவுள்ளன'' என்று கூறினார்.