Breaking News

இன்று யாழ்ப்பாணம் செல்கிறார் இந்திய இராணுவத் தளபதி

இலங்கைக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் இன்று யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவுள்ளார்.

நேற்று முன்தினம் கொழும்பு வந்த இந்திய இராணுவத் தளபதி, நேற்று இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவ உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் வடக்கிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணம் செல்லும், ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், பலாலியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இலங்கை படையினரின் கேந்திர முக்கியத்துவம் மிக்க தளங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவுக்கும் அவர் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இந்திய இராணுவத் தளபதியின் பயணத் திட்ட நிகழ்ச்சி நிரலை இலங்கை இராணுவத் தலைமையகம் வெளியிடாமல் இரகசியமாக வைத்திருக்கிறது.

இந்திய இராணுவத் தளபதியின் பாதுகாப்பு கருதியே அவரது நிகழ்ச்சி நிரல் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடவில்லை என்று இலங்கைஇராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.