Breaking News

தமிழ் மக்கள் பேரவை குறித்து ஆராய வேண்டும் எனக் கோரிக்கை

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை குறித்து ஆராயப்பட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம், வட மாகாண சபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வட மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 58 சதவீதமே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த மாகாண சபை உறுப்பினர்கள், வருட இறுதியில் எஞ்சிய நிதி திரும்பிச் செல்லும் வாய்ப்புள்ளதால் அது குறித்தும் ஆராயுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் பிரகாரம் எதிர்வரும் சில தினங்களில் வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.