Breaking News

குஷல் பெரேரா விடயத்தில் சதிச் செயல் இருக்கலாமாம்!

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் குஷல் பெரேரா விடயத்தில் சதிச் செயல் இருக்கலாம் என, விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் தோல்வியடைந்ததை அடுத்து, குஷல் பெரேரா, தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக இடம்பெற்று வரும் தொடர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இந்தநிலையில் அவரைப் பாதுகாக்க எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அத்துடன் சர்வதேச கிரிக்கெட் கவுனிலின் அறிவிப்புக்கு அமைய, அதிகாரிகள், அவரது பீ மாதிரியை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குஷல் பெரேராவை அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வௌியேற்ற மேற்கொள்ளப்பட்ட சதிவேலையாக இது இருக்கலாம் என எண்ணத் தோன்றுவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் போது, தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் தோல்வியடைந்த, மற்றுமொரு வீரர் உபுல் தரங்க மூன்று மாதங்கள் விளையாட தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.