கிளிநொச்சியில் சடலங்கள் அகற்றப்பட்டு மணல் அகழ்வு
கிளிநொச்சி - வட்டக்கச்சி, பன்னங்கண்டி பாலத்தின் அருகில் உள்ள பொது மயானப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் விவகாரத்தில் பொலிஸார் பாராமுகமாக செயற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சட்டவிரோத மண்அகழ்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.இதனை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற அவர், அங்குள்ள நிலைமைகளை அவதானித்துள்ளார்.
அங்கு மயானப்பகுதி முழுவதும் மணல் அகழப்பட்டுக் கொண்டுடிருந்ததாகவும், மயானத்தில் புதைக்கப்பட்ட சடங்களை வெளியே எடுத்துவைத்துவிட்டுக்கூட மணல் அகழ்வு மிகமோசமான முறையில் நடைபெற்றுக்கொண்டு இருந்ததுடன் சடலங்கள் எரியூட்டப்படும் இடங்களில் கூட மண் கொள்ளையர்களினால் அள்ளப்பட்டுள்ளதாகவும் சிறிதரன் எம்.பி குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், பாரிய கிடங்குகளாக தோண்டப்பட்டுள்ள இப்பகுதிக்குள் பன்னங்கண்டி ஆறு உடைத்து உள்நுழைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது – என்றார்.
மிகமோசமான சூழல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சிகரமான இந்தநிலைமை குறித்து சம்பவ இடத்தில் இருந்து கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அறிவித்தபோதும் அவர்கள் ஒன்றரைமணிநேரமாக சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை என கூறப்படுகிறது.
சம நேரத்தில் வீதியால் வந்த ரோந்து பொலிஸாரிடம் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்திய போதும் கவனத்தில் எடுக்காமால் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உழவியந்திரத்தை எடுத்து செல்வதற்கு கால அவகாசத்தை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் அப்பகுதியில் கூடிய மக்கள் மண் கொள்ளை தினசரி நிகழ்வதாகவும் இது பொலிஸாருக்கும் தெரியும் என்றும் இதன்பின்னனியில் பலரது தொடர்புகளும் பணப்பரிமாற்றங்களும் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் முற்றாக அழிக்கப்பட்டு அந்த இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








