Breaking News

பிரபாகரன் வித்தியாசமானவர் - ராஜித புகழாரம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இலங்கை தேசியக் கொடியையோ அல்லது தேசிய கீதத்தையோ மாற்றுமாறு கோரவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘ஓர் இனப்பிரிவினர் இன்னொரு இனப்பிரிவினரை ஆயுதம் மூலம் தோற்கடித்தனர், வெற்றிப்பெற்ற இனம் நாட்டின் ஆட்சியைப் கைப்பற்றி ஆட்சி செய்தது. இது வரலாற்றில் நடந்தது. பின்னர் இந்தக் கலாசாரம் மாற்றமடைந்து, நாட்டைப் பிரிக்காமல் எவ்வாறு அதிகாரத்தை பகிர்வது தொடர்பிலான யோசனைகளும், அதற்கான பேச்சுக்களும் இடம்பெற்றன. இதனடிப்படையில் ஒற்றையாட்சி, சமஷ்டி போன்ற ஆட்சி முறைகள் தோன்றின.

இவ்வாறு ஒற்றையாட்சி, சமஷ்டியாட்சி என்று ஆட்சி அதிகாரம் தோன்றினாலும், அதற்கான அதிகார வரையறைகள் குறித்து எந்தவொரு இடத்திலும் உறுதியாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எனினும் இந்நாட்டிலுள்ள இனவாதிகள், இந்தோனேசியாவின் அச்சே போன்று இந்நாட்டையும் பிரிக்கப்போகிறார்கள் என்ற பீதியை ஏற்படுத்தினார்கள். அச்சே பெற்றுக்கொண்ட அதிகாரங்கள் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கேட்கவில்லை. அச்சேவிற்கு புறம்பான தேசியக் கொடி, தேசிய கீதம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என்பன வழங்கப்பட்டன.

ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இலங்கை தேசிய கீதத்தையோ அல்லது தேசிய கொடியையோ மாற்றியமைக்குமாறு கோரவில்லை. அதற்கு அப்பாலானவைகளையே அவர் கோரினார்’ என்றும் கூறினார்.