Breaking News

ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர் பலர் இணைவு!- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தகவல்!

இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்புடன் இணைந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

அந்த வகையில் குறைந்தது 36 பேராவது சிரியா சென்றுள்ளமை தமக்கு தெரியவந்துள்ளது என பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார். இதில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குவர் எனவும் அவர் கூறினார். 

இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்ற அனைவரும் இல்லையென்றாலும், அநேகர் ஐ எஸ் அமைப்பில் இணைந்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறினார். இதனிடையே, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தீவிரவாதக் குழுவுக்கு ஆட்களை சேர்க்கும் இலங்கைப் பிரஜை ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மொஹமட் மூஹ்சின் ஷர்ஹாஸ் நிலாம் (வயது 37) என்ற இலங்கையர், சிரியாவில் ஐ.எஸ் அமைப்பில் இருந்தபோது, விமானத் தாக்குதலில் பலியானார் என கடந்த ஆண்டு ஜூலையில் செய்திகள் வெளியாயின. குருநாகல் மாவட்டத்தில் சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராக இருந்த அவர், அவரது குடும்பத்துடன் 2014 ஆம் ஆண்டு டிசெம்பரில் துருக்கி வழியாக சிரியாவுக்கு சென்றிருந்தார் எனவும் அந்த செய்திகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.