இலங்கையில் சித்திரவதை கலாச்சாரம் தொடர்கின்றது - யஷ்மின் சூகா
இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ள போதிலும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் என்பன தொடர்ந்தும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதி என்ற திட்டத்தினால் நாளை(வியாழக்கிழமை) வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிர்வாக இயக்குநரும், ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்திருந்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவருமான யஷ்மின் சூகாவினால் தயார் செய்யப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வெளியிடப்பவுள்ள அறிக்கையில், 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் பிரிவுகளின் தடுப்பில் இருந்தபோது இடம்பெற்ற கடுமையானதும், அடிக்கடி மேற்கொள்ளப்பட்டதுமான சித்திரவதைகள் மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல்கள் தொடர்பில் உலகின் 4 நாடுகளில் தப்பிவாழும் 20 தமிழர்கள் விபரமான சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
பாதுகாப்பின் நிமித்தம் இந்த சாட்சியாளர்களின் விபரங்கள் அனைத்தும் வெளியிடப்படவில்லை எனவும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இன்னும் இலங்கையிலேயே இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் 2015ஆம் ஆண்டில் அடிக்கடி பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களால் ஆண் மற்றும் பெண் என இருபாலார் மீதும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பலாத்காரங்கள் பற்றிய வரைபு ரீதியான விபரங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் அறிக்கை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துஷ்பிரயோகங்களானது இரகசிய மற்றும் அடையாளம் காணப்பட்டவை என இரண்டு வகையான இடங்களிலும் இடம்பெற்றுள்ளதாகவும், வவுனியாவிலுள்ள ஜோசப் முகாமும் இதில் உள்ளடங்குவதோடு, சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் தமது முன்னைய அறிக்கைகளில் இந்த முகாமை சித்திரவதை தளமாக குறிப்பிட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்திற்கு மிக அண்மையில் தெரியவந்துள்ள சித்திரதை மற்றும் பாலியல் வன்முறை தொடர்பிலான வெள்ளை வான் கடத்தல் சம்பவம் கடந்த டிசம்பர் மாதமே இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








