விவாகரத்திற்கு மகிந்தவே காரணம்!
இலங்கையில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமைக்கு மஹிந்தவே காரணம் என கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தின் போக்குக் காரணமாக குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டமையால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதனால் பலர் விவாகரத்துக் கோரி நீதிமன்றம் சென்றுள்ளனர். இவ்வாறு விவகாரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு மகிந்த ராஜபக்ச நிர்வாகமே காரணமாகும்.
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் 95 வீதத்துக்கும் அதிகமான வழக்குகள் விவகாரத்துக் கோரிய வழக்குகள். குடும்ப பொருளாதார நிலைமையே இதற்கு பிரதான காரணமாகும்.
இவ்வாறான நிலையில் பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி குடும்ப பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அடித்தளமிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஊடாக 10 இலட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதன் ஊடாக அவர்களின் வருமானத்தை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடையும் நிலையில் கம்பன்பில கறுப்புக் கொடியை ஏற்றுமாறு கூறுகிறார். ஆனால் நாம் பச்சைக் கொடியையோ அல்லது நீலக் கொடியையோ ஏற்றப் போவதில்லை. நாடு முழுவதிலும் தேசியக் கொடியையே ஏற்றப்போகின்றோம்.
அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியும் என சிலர் கனவு கண்டு வருகின்றனர். எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்தை எவராலும் அசைக்க முடியாது.அவ்வாறு அரசை கலைக்கமுடியும் எனக் கூறுவது வெறும் கனவு மாத்திரமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








