பாகிஸ்தான் பிரதமரை இன்று சந்திக்கிறார் மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கும் இடையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இரு தரப்புப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமரை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு, இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. அதனையடுத்தே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பலரையும் பாகிஸ்தான் பிரதமர் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, இரு நாடுகளுக்குமிடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார, விஞ்ஞான, தொழிநுட்பவியல், வர்த்தகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.








