Breaking News

சிவா பசுபதி குறித்த இந்திய ஊடகச் செய்திகள் உண்மையில்லை: முதலமைச்சர்

தமிழ் மக்கள் பேரவையினால் இனப்பிரச்சினைகளுக்கான
தீர்வுத் திட்ட யோசனைகளை தயாரிக்கும் உபகுழுவில் பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பை சிவாபசுபதி நிராகரித்து விட்டார் என்றும் அத்துடன் அவர் தமிழ் மக்கள் பேரவை இப்போது தேவையில்லை என்றும் தெரிவித்ததாக இந்திய ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறித்து தான் பதில் எதுவும் கூறவேண்டியதில்லை என்று வட மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவை தலைவருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகத்தில் இவ்வாறு வெளியான செய்தி உண்மையா என்று விக்னேஸ்வரனிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்த அவர் சிவா பசுபதி தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிடும் செய்தி ‘விஷமத்தனமானவை’ என்றும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் உபகுழுவில் பங்கெடுக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் சட்டமா அதிபரும், விடுதலைப் புலிகளின் சட்ட விவகார குழுவின் உறுப்பினருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார் என்று சில இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் ‘பேரவைக்கு எதிரான விஷமத்தனமான செய்தி’ என்று வட மாகாண முதலமைச்சரும் பேரவையின் தலைவருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் உபகுழுவில் பங்கெடுக்குமாறு நீங்கள் விடுக்கப்பட்ட அழைப்பை சிவா பசுபதி நிராகரித்துவிட்டார் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே இது உண்மையா” என்று கேட்டபோதே இவ்வாறு தெரிவித்த அவர் ” இதற்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ” என்று கூறினார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி தற்போது யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு தங்கி உள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அமைக்கப்பட்ட உபகுழுவில் 15 பேர் இடம்பெறுவர் என்றும் அதில் இருவர் வட மாகாண முதலமைச்சர் சார்பாக நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகள் சார்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இருவரை இக்கூட்டத்தில் முன்மொழிந்திருந்தார்கள்.

இந்த நிலையிலேயே முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதியை தனது பிரதிநிதிகளில் ஒருவராக நியமிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

தற்போது 82 வயதுடைய சிவா பசுபதி இலங்கையின் 34 ஆவது சட்ட மா அதிபராக 13 வருட காலம் (1975 – 1988) பணியாற்றியுள்ளார். இவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆவர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுகும் இடையில் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவின் ஆலோசகராக இவர் பணியாற்றியிருந்துடன் விடுதலிப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு இடைக்கால தீர்வாக முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை இந்த அரசியல் விவகார குழுவே தயாரித்திருந்தது.