Breaking News

கொள்கையில் தளராத துணிவுடன் தமிழ்மக்கள் பேரவை பயணிக்க தொடங்கியுள்ளது

அரசியல் என்ற எல்லைகளைக் கடந்து தமிழ் மக்களின் நலன்கள், உரிமைகளை வலியுறுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை தனது பணியை மிகவும் அடக்கமாகவும் உறுதியாகவும் முன்னெடுத்துச் செல்கின்றது என பேரவையின் ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராக சில ஊடகங்கள் வேண்டுமென்றே எதிர்ப்பிரசாரம் செய்கின்ற போதிலும் தமிழ்மக்கள் பேரவையானது தனது கொள்கையில் தளராத துணிவோடு பயணிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்த்தரப்புக்கள் அனைத்தும் ஓரணியில் ஒன்று திரண்டு தமிழ் மக்களின் உரிமையை வலியுறுத்துகின்ற தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

மிகப்பெரும் தியாகங்கள் நடந்தேறிய எங்கள் இனத்திற்கான தீர்வென்பது தனி மனிதர்களால் முடிவு செய்யப்படக்கூடியதன்று. எனவே தான் தமிழ் அரசியல் தரப்புகளும் பொதுஅமைப்புகளும் மதத் தலைமைகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து எமக்கான தீரவுத்திட்டத்தை தயாரிப்பதுடன் அனைத்துத் தமிழ் மக்களிடமும் அதனை எடுத்துச் சென்று அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமானது என்று உணரப்பட்டது.

இந்தச் செயற்பாட்டிற்கு அனைத்துத் தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் குறிப்பாக எமது புலம்பெயர் உறவுகள் ஒன்று சேர்ந்து தமது பேராதரவை தரவேண்டும் என்பதும் எம் தாழ்மையான வேண்டுகோள். முன்பு ஒருபோதும் சாத்தியப்படாமல் போன ஒரு முக்கியமான விடயம் இப்போது சாத்தியப்பட்டுள்ளது. அதுவே எங்கள் தாயகத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்கள் ஒன்று சேர்ந்து எமக்கான அரசியல் தீர்வுத் திட்ட வரைபைத் தயாரிக்கும் பணியாகும்.

குறைந்தது 15 துறைசார் நிபுணர்கள் அடங்கிய உப குழுவானது உள்நாட்டு, வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ் உப குழுவானது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அபிலாசைகள் என்பவற்றை நிரந்தரமாகப் பெற்றுக் கொள்வதும் நடைமுறைக்குச் சாத்தியமானதும் சர்வதேசத்தின் ஆதரவைப் பெறக்கூடியதுமான தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதுடன் அது தொடரபில் தமிழ்மக்களின் கருத்துக்களையும் கண்டறியும்.

இரண்டு தொடக்கம் மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் தீர்வுத் திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளிடம் கையளிக்கப்படுவதுடன் இத்தீர்வுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழ்மக்கள் பேரவை கடுமையாகப் பாடுபடும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை தீர்வுத் திட்ட வரைபு தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழ் உறவுகள் தமது கருத்துக்களை நிபுணர் குழுவுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படடுள்ளதுடன் politicalsub@tamilpeoplescouncil.org என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவல்களைப்பரிமாறிக் கொள்ளலாம். இன்றைய தினம் தனது பணியை ஆரம்பித்துள்ள உப குழுவில் இடம்பெற்றுள்ள நிபுணர்களின் பெயர் விபரங்களும் ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் விபரங்களும் மிக விரைவில் வெளியிடப்படும்.