Breaking News

கச்சத்தீவு திருவிழா - இலங்கை அகதிகளுக்குத் தடை

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள, கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் கலந்துகொள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதர் என். நடராஜன் அழைப்புக் கடிதம் அனுப்பி உள்ளார். இதனையேற்று தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழா செல்ல ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தநிலையில் புதன்கிழமை இராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ராமபிரதீபன் தலைமையில் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா செல்லுவது தொடர்பான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் தமிழக காவல்துறை, இந்திய கடற்படை, கடலோர காவற்படை, சுங்கத்துறை, மத்திய, மாநில உளவுத்துறை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட அதிகாரிகள், மீனவப் பிரநிதிகள், கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருப்பயண ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. 

தமிழகத்திலிருந்து கச்சத்தீவு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் இராமேசுவரம் பங்குத்தந்தை சகாயராஜ் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா பெப்ரவரி 20 மற்றும் 21ம் திகதிகளில் நடைபெற உள்ளன. இதனை விசைப்படகு மீனவர்கள் புறக்கணிக்கப் போவதாகவும், பயணத்திற்குரிய விசைப்படகுகளை வழங்க மாட்டோம் என கூறியுள்ளது தொடர்பாக விரைவில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி பயணத்திற்கு 100 விசைப்படகுகள் ஏற்பாடு செய்யப்படும். நாட்டுப் படகுகளையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை எடுத்து வைத்தோம் ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் தங்களுக்குரிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். விலை உயர்ந்த நகை மற்றும் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பணம் எடுத்து செல்லக்கூடாது. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் திருவிழாவிற்கு வர அனுமதி கிடையாது. பயணிகள் கேமிரா, லேப் டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து வர அனுமதி இல்லை, என்றார்.