Breaking News

பரணகம குழுவின் இறுதி அறிக்கை ஜுனில்

காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது. 

இந்தத் தகவலை மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம உறுதிப்படுத்தினார். எமக்கு வழங்கப்பட்டுள்ள பதவி நீடிப்பு போதுமானதாக அல்ல. மூன்றுமாத காலத்துக்குள் முக்கிய பல விடயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனினும், ஜுன் மாத இறுதிக்குள் இறுதி அறிக்கையை கையளிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.


பரணகம ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த 15ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. எனினும்இபணிகளை இறுதிப்படுத்துவதற்காக மூன்று மாத கால பதவி நீடிப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்பது குற்ப்பிடத்தக்கது. 

போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தமது ஆட்சியின்போது ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூவரடங்கிய குழுவொன்றை மகிந்த ராஜபக்‌ச அமைத்திருந்தார்.

இந்த விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், உள்ளக போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில் அதன் விடயப்பரப்பை மகிந்த விஸ்தரித்ததுடன், அனைத்துலக சட்டதிட்டம் தொடர்பில் பரணகம குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக டெஸ்மன் டி சில்வா தலைமையில் அறுவடரங்கிய ஆலோசனைக்குழுவொன்றையும் அமைத்திருந்தார்.

ஆட்சிமாற்றத்தின் பின்னரும் பரணகம குழுவுக்கு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புதல் வழங்கினார். அந்தவகையில் விசாரணைகளை முன்னெடுத்த பரணகம ஆணைக்குழு போர்க்குற்றங்கள் தொடர்பிலான தமது இறுதி விசாரணை அறிக்கையை கடந்த ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியிடம் கையளித்தது. அத்துடன், காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டது.

எனினும், காணாமல்போக் செய்யப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே தான் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக தற்காலிக பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.