Breaking News

பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா நேற்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தனது 75 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

1941 ஜனவரி 25ஆம் நாள் யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணையில் பிறந்த க.குணராசா, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று நிர்வாக சேவை அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் ஏராளமான படைப்புகளை எழுதியதன் மூலம் இவர், ஈழத்து வாசகர்கள் மட்டுமன்றி, உலகெங்கும் தமிழர்களால் அறியப்பட்டவர்.சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்களை மட்டுமன்றி, வரலாறு, புவியியல் நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.


நந்திக்கடல், சித்திரா பௌர்ணமி, ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, காட்டாறு, இரவின் முடிவு, ஜன்ம பூமி, கந்தவேள் கோட்டம், கடற்கோட்டை, கிடுகு வேலி போன்ற நாவல்களை இவர் வெளியிட்டுள்ளார்.

பூதத்தீவுப் புதிர்கள், ஆறுகால்மடம் ஆகிய சிறுவர் புதினங்களையும், ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற ஆய்வு நூலையும் செங்கை ஆழியான் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாண அரச பரம்பரை, நல்லை நகர் நூல், மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம், களம்பல கண்ட யாழ் கோட்டை உள்ளிட்ட பல வரலாற்று நூல்களையும், இவர் எழுதி வெளியிட்டார்.

இவர் எழுதிய சிறுகதைகள். மல்லிகைச் சிறுகதைகள் – 1, மல்லிகைச் சிறுகதைகள் – 2, சுதந்திரன் சிறுகதைகள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், முனியப்பதாசன் கதைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.