நாட்டில் மீண்டும் வறுமை - அரசாங்கத்தை சாடுகிறார் மஹிந்த
நல்லாட்சி அரசாங்கம் தனது விருப்பதிற்கு ஏற்றவகையில் சர்வதேச கடன்களை பெற்றுள்ளமையே இன்று மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தவேண்டிய நிலைமைக்கு காரணம் 2001-–04ஆம் ஆண்டுகளில் ரணில் பிரதமராக இருந்த காலத்தில் இருந்த அதே வறுமையான நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருட காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் 6,361 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை கடனாக பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதானது.
அவ்அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பத்தில் பரிமாறல் அடிப்படையில் இந்தியாவிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் மே மாதம் மீண்டும் 650 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டது. ஜூலை மாதம் மீண்டும் இந்தியாவிடம் கைமாறல் அடிப்படையில் 1,100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டுள்ளது.
பின்னர் ஒக்டோபர் மாதம் பிணைமுறி வழங்கி மேலும் 1,500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டது. அது மட்டுமல்லாது 2015 மார்ச் மாதம் முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 12 தடவைகள் குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் என்ற ரீதியில் 2,711 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் கடனாக பெற்றுள்ளது. ஆகவே ஒரு வருட காலத்தில் இந்த அரசாங்கம் 6,361 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை கடனாக பெற்றுள்ளது. இவ்வாறு ஒரு வருட காலத்தில் அளவுக்கு அதிகமான கடன் தொகையை நாம் ஒருபோதும் பெற்றுக்கொண்டதில்லை.
மத்தள விமான நிலையம் அமைக்க 190 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின. அம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்க 426 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின. நுரைச்சோலை அனல் மின் நிலையம் அமைக்க 1,340 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின. கொழும்பு – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை அமைக்க 630 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியது. கொழும்பு-–நீர்கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை அமைக்க 248 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின.
ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் ஒரு ஆண்டுக்குள் பெற்றுள்ள கடன் தொகையினால் நாம் செய்ததிலும் பார்க்க இரு மடங்கு மேலதிகமாக அபிவிருத்திகளை செய்து முடிக்க முடியும். ஆனால் இவர்களால் ஒரு பாலத்தை கூட அமைக்க முடியவில்லை என்பதே உண்மையாகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் உலக அளவில் எண்ணெயின் விலை 70 தொடக்கம் 75 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் எமக்கு கடந்த ஆண்டிலும் பார்க்க இம்முறை 2,500 மில்லியன் டொலர் எஞ்சியுள்ளது. இவ்வளவு பணம் எஞ்சியும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையின் நஷ்டத்தை தடுக்க முடியாது போயுள்ளது. இவ்வாறு அரசாங்கம் செயற்பட்ட காரணத்தினால் முதலீட்டு சந்தையினால் இலங்கையை அவதானித்துக் கொண்டு உள்ளனர். இதன் காரணமாகவே கடன் பட்டியலிலும் இலங்கையை கீழ் நிலைக்கு தள்ளியுள்ளனர்.
மேலும் அரசாங்கம் பெற்ற கடனை தவிர இதற்கு முன்னர் ஆட்சி செய்த அரசாங்கங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையானது 1500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமேயாகும். அவ்வாறான கடன் தொகை இருப்பதனால் எம்மை தரப்படுத்தலில் கீழ் தள்ள மாட்டார்கள். ஆனால் அரசாங்கம் முறையற்ற வகையில் கேட்பாரின்றி கடன்களை பெற்றமையே இந்த நிலைமைக்கு காரணமாகும்.
இவ்வாறு நாம் உள்ளதால் சர்வதேசத்திடம் இருந்து அதிக வட்டிக்கே கடன் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் அதிக வட்டிக்கு கூட கடன் கிடைக்க வாய்ப்புக்கள் இல்லை. அவ்வாறு இருக்கையில் அரசாங்கம் இன்று சர்வதேச நாணய நிதியம் பக்கம் திரும்பவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் கூட கொடை வழங்கும் நிறுவனம் அல்ல. பெறப்படும் கடனை மீண்டும் திரும்ப மீளளிக்கும் வகையில் அரசாங்கத்தின் வருமான சுட்டியை கூட்டிக்கொள்ள முடியும் என வெளிப்படுத்த வேண்டும்.
வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவும் மீண்டும் கடன் வாங்கவுமே அரசாங்கம் வரிகளை அதிகரிக்கும். இந்த அரசாங்கம் இந்தியாவிடம் வாங்கிய கடனை கொடுக்க நேர்ந்தமையே அண்மையில் நாம் பல சிக்கலை எதிர்கொள்ள காரணமாக அமைந்தது. இவ்வளவு தொகையை அரசாங்கம் கடனாகப் பெரும் சந்தர்ப்பங்களில் அதை நீண்டகால கடனாக வழங்குவது என்ற அடிப்படையில் தான் பெறும். அந்த அடிப்படை காரணிகூட தெரியாது இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. 2001–04ஆம் ஆண்டுகளில் ரணில் பிரதமராக இருந்த காலத்தில் மொத்த தேசிய உற்பத்திக்கு இணையான கடன் சுமை 100 க்கு 102 வீதமாக இருந்தது.
எனது ஆட்சியில் ஒவ்வொரு வருடமும் இந்த கடன் வீதத்தை குறைத்து 2014ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் 75.5 வீதமாக குறைக்க முடிந்தது. இதுவே மிகவும் குறைந்த கடன் வீதமாகும். 2006-–09 ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில் அரசாங்கத்தின் செலவீனம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 100க்கு 23 சதவீதமாகும். ஆனால் யுத்தத்தின் பின்னர் அது குறைக்கப்பட்டு 2014ஆம் ஆண்டு ஆகையில் 18.3 வீதமாக குறைத்தோம். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொத்தத் தேசிய உற்பத்திக்கு இணையாக அரசின் செலவு குறைந்த வீதம் இதுவேயாகும்.
நாம் கடனை அதிகமாக பெற்றோம் என பிரதமர் ரணில் கூறுவது மிகப்பெரிய பொய்யாகும். சகல அரச செயற்றிட்டங்களுக்கும் வங்கிகளின் தனிப்பட்ட கணக்கு வழக்கு உள்ளது. அந்தந்த கடன்கள் உரிய நிறுவனங்களின் சட்டதிட்டங்களுக்கு அமையவே நிர்வகிக்கப்படும். அமைச்சரவை அனுமதி இல்லாது அந்த கடன்களை பெறுவதென்றால் அதை பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்று அவ்வாறு எந்த நடைமுறையும் இல்லை. அரசாங்கம் தனது விருப்பத்துக்கு சர்வதேச கடன்களை வாங்கிக்கொண்டு செல்கின்றது. ஆனால் இந்த செயற்பாட்டின் காரணமாக மக்களே இறுதியில் பாதிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.








