காணாமல்போனோர் விடயத்தில் டக்ளஸ்- சுமந்திரன் தர்க்கம்
காணாமல்போனோர் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் சபையில் கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
நேற்று செவ்வாய்க்கிழமை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு உரையாற்றும்போது காணாமல் போனவர்கள் தொடர்பாக உண்மை நிலைமை கண்டறியப்படவேண்டுமென குறிப்பிட்டபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறுக்கீடு செய்து நீங்கள் காரணமாகவிருக்கும் சம்பவங்களுக்கு என்ன செய்யப்போகின்றீர்கள். ஆணைக்குழுக்களின் முன்னிலையில் உங்கள் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றனவே என்றார்.
அதன்போது உங்களுக்கும் சூக்காவுக்கும் இடையில் காணப்படும் தொடர்பை தினேஷ் எம்.பி. தற்போது கூறினார் அல்லவா? காணாமல் போனமைக்கு நீங்கள் தான் காரணம் என்றார். இதன்போது எம்.ஏ.சுமந்திரனுடன் சாள்ஸ் நிர்மலநாதன் உங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறுங்கள் என்றனர். அதற்கு பதிலளித்த டக்ளஸ் எம்.பி. இளநீர் குடித்தது யாரோ கோம்பை சூப்பியது யாரோ எனக் கூறிவிட்டு உரையை தொடர்ந்திருந்தார்.
அதன் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை சபை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து சுமந்திரன் ஏதோ கூறினார். அதனைத்தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் பதிலுக்கு கூறினார்.
தொடர்ந்து தனது இருக்கையிலிருந்து கோப்புக்களுடன் எழுந்து சென்ற டக்ளஸ் தேவானந்தா சுமந்திரன் அமர்ந்திருக்கும் ஆசன வரிசைக்கு அருகாமையில் சென்று ஏதோ கூறிவிட்டு வெளியேறிருந்தார். அவர் வெளியேறும் தருணத்திலும் சுமந்திரன் வார்த்தைகளை வெளியிட்ட வண்ணமிருந்தமை குறிப்பிடத்தக்கது.








