போர் விசாரணைப் பொறிமுறை: 'வேண்டும்- 42.2 வீதம், வேண்டாம்- 44.2 வீதம்'
இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவினை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ளது.
இதில், இறுதி யுத்தத்தின் போது நடந்தவற்றை விசாரிப்பதற்கான பொறிமுறை எதுவும் அவசியம் அவசியம் இல்லை என்று ஆய்வில் பங்கேற்றவர்களில் 44.2 வீதமானவர்கள் கூறியுள்ளனர்.
அதேநேரம், விசாரணை பொறிமுறை ஒன்று அவசியம் என்ற நிலைப்பாட்டை 42.2 வீதமானோர் வெளிப்படுத்தியுள்ளனர்.
விசாரணைப் பொறிமுறை வேண்டும் எனக் கூறுபவர்களில் 47.3 வீதமானோர் அந்த விசாரணை வெளிநாட்டு தலையீடு இல்லாமல் முழுக்க உள்நாட்டு பொறிமுறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 9 வீதமானவர்களே முழுக்க சர்வதேச தலையீட்டுடனான விசாரணை தேவை என்று வலியுறுத்துகின்றனர்.
ஊழலை ஒழிப்பதில் அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் மீது மக்கள் குறைவான நம்பிக்கையையே வைத்துள்ளதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த விடயத்தில் கிட்டத்தட்ட 41 வீதமானோர் அரசாங்கம் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அதேவேளை 34 வீதமானோர் அரசாங்கம் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக நம்புகின்றனர்.
வாழ்க்கைச் செலவை அரசாங்கம் கையாளும் முறைமையில் 51.2 வீதமானவர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். அதேவேளை 30 வீதமானோர் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தி வெளியிட்டுள்ளனர்.
தமிழ்-சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என 49 வீதமானோர் விரும்பும் அதேவேளை, 41 வீதமானோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அரசியலமைப்பு தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அதற்கு வெளியே அந்த எண்ணிக்கையை அதிகரிக்க இடமளிக்கக்கூடாது என்றும் ஆய்வில் கலந்துகொண்டோரில் அரைவாசிப்பேர் கருதுகின்றனர்.
சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் தவறான நடத்தைகளில் மதகுருமார்கள் ஈடுபட்டதாக நிருபிக்கப்பட்டால், மத வேறுபாடு இல்லாமல் மதகுருமார்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை 74.4 வீதமானோர் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வு நாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள 4 பிரதான சமூகத்தவர்கள் மத்தியிலும் ஆங்காங்கே நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டாயிரத்து 102 பங்கேற்றிருந்தனர்.
வடக்கு மாகாணத்தில் ஆய்வினை இலகுவாக மேற்கொள்ள முடியாமல் போன சில இடங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் உட்பட நாடெங்கிலும் கடந்த பிப்ரவரி 18-ம் திகதி முதல் மார்ச் 3-ம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.








