கோத்தா கைது செய்யப்பட்டால் அது விக்கி,சம்பந்தனுக்கு கிடைக்கும் வெற்றி..!!
அமெரிக்காவில் வைத்து கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டாலோ அல்லது விசாரிக்கப்பட்டாலோ அது இலங்கையில் தனித்தமிழீழத்தை அமைப்பதற்காக சம்பந்தன், விக்கினேஸ்வரன், புலம்பெயர் புலிகளுக்கு கிடைக்கும் வெற்றியாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
சமஷ்டி ஆசையை காட்டி தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி சிங்கள மக்களை தூண்டிவிடுவதே சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலாகும் என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்;
கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜையாகும். எனவே தான் விடுதலைப் புலிகள் சார்பு, புலம்பெயர் அமைப்புக்கள் அவரை கைது செய்யுமாறு ஒபாமாவிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளன.
இதன் அடிப்படையில் கோத்தபாய ராஜபக் ஷ கைது செ்யயப்பட்டாலோ அல்லது அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாலோ அது இலங்கையில் தனித் தமிழீழத்தை அமைப்பதற்கு முயற்சிக்கும் சம்பந்தன், விக்கினேஸ்வரன் புலம்பெயர் புலிகளுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும்.
அத்தோடு யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையையும் இந்த முக்கூட்டணி வலியுறுத்தி இதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்ளும். இன்று இந்த அரசாங்கத்தினூடாக 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்தில் படிப்படியாக காணி, பொலிஸ் அதிகாரங்களையும் பெற்றுக் கொள்ளும்.
அதன் பின்னர் அமெரிக்காவின் உதவியுடனும் இந்தியாவின் உதவியுடனும் தனித் தமிழீழத்துக்கான நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக முன்னெடுக்கும். இதுவே இவர்களினது வேலைத் திட்டமாகும். அதனை சூட்சுமமாக முன்னெடுக்கின்றனர்.
தமிழ் மக்கள் மத்தியில் சமஷ்டியை பெற்றுக் கொடுப்பதாக ஆசை காட்டி சந்தோசப்படுத்தி அவர்கள் மத்தியில் மீண்டும் பிரிவினைவாத எதிர்பார்ப்பினை ஊக்குவித்து பொருளாதாரப் பிரச்சினைகளை மறக்கச் செய்யும் நடவடிக்கைகளை கூட்டமைப்பு முன்னெடுக்கின்றது . மறுபுறம் சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிராக தூண்டிவிடும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் இன மோதல்களை ஏற்படுத்தி சர்வதேச தலையீடுகளை ஏற்படுத்துவதே இலக்காகும்.
இந்த இலக்கு பெற்றுக்கொள்ளப்பட்டால் சிங்கள மக்களுடன் தமிழ் மக்களுக்கு இணைந்து வாழ முடியாது என சர்வதேசத்திற்கு இனங் காட்டப்பட்டு தனித்தமிழீழத்தை அமைத்து நாட்டை பிரிப்பதே நோக்கமாக அமையும் என்றார்.








