பிரபாகரனின் துப்பாக்கியால் முடியாததை சம்பந்தன் செய்யப் பார்க்கிறார்..!!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால், துப்பாக்கியால் செய்யமுடியாது போனதை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசியலால் செய்யப்பார்க்கிறார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-
”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து சுயாதீன அரசாங்கமாக்குவது, தமிழீழம் மேலும் தலைதூக்குவதற்கான நடவடிக்கையாகும்.
பிரபாகரனால் துப்பாக்கியைக் கொண்டு செய்யமுடியாது போனதை, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுகிறார். ஆனால், ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. பிரதியமைச்சர் அஜித் பி பெரேராவே இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
தற்போதைய அரசாங்கம் மிகவும் பலவீனமானது. அதனை பயன்படுத்திக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முனைகிறது. இவர்களுக்குத்தான் இன்று நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
அத்தோடு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழர்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிற்கவில்லை. ஆனால் தற்போதுது தேர்தல் பிரசாரத்தில், இலங்கை தமிழர்களுக்காக தனி ஈழம் அமைப்பதாகவும் அவர்களுக்கு உதவிகள் வழங்குவதாகவும் கூறி வருகிறார்.
நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுவத்துவதாக சிலர் ஊடகங்கள் வாயிலாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியது நாமல்ல. ஜனாதிபதி மைத்திரியே கட்சியை பிளவுபடுத்தினார்” என்றார்.