ராஜீவ் கொலை வழக்கு 3 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்யும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த முடிவை எதிர்த்து அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
பின்னர் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இறுதி முடிவு செய்யும் என்று தீர்ப்பு அளித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் அரசியல் அமர்வு அமைக்கப்பட்டது.
எச்.எல்.தத்து தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, 7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேன்முறையீடு மீதான விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனியாக விசாரிக்கும் என்றும் தெரிவித்தது.
அதன்படி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழக்கை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் நேற்றுமுன்தினம் அறிவித்தது.
எனினும் யாருடைய தலைமையிலான அமர்வு என்பதும், எப்போது முதல் விசாரணை தொடங்கும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.








