"பிரதமருக்கு அடிபணிந்து ஜனாதிபதி செயற்படவில்லை''
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பவரா இல்லையா என்பது எதிர்வரும் முதலாம் திகதி தெரியவரும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமருக்கு பணிந்து செல்வதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அவ்வாறில்லை. ஜனாதிபதி சுயாதீனமாகச் செயற்படுகிறார். அதனால்தான் வற்வரி தொடர்பி்ல் அவர் உறுதியான முடிவினை வெளியிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் காரியாலயத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக்கூட்டம் தொடர்பாகவே தற்போது பேசப்படுகிறது. எந்தக் கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனினும் அது தொடர்பில் யாரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ மே தினக்கூட்டம் காலி சமனல மைதானத்தில் நடைபெறவுள்ளது. குழுவொன்று கிருலப்பனையில் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. அக்கூட்டத்திற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமு் எவ்வித தொடர்புமில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில் அதற்கு நீண்ட வரலாறு உள்ளது. அது சமூக,சமய,அரசியல்,கலாசார விடயங்களில் மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கட்சியாகும். அக்கட்சியை எவரும் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்த முடியாது. எனவே உறுப்பினர்கள் அனைவரும் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்து மே தினத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
ஜனவரி எட்டாம் திகதி ஏற்பட்ட மாற்றத்திற்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அதிகமானவர்களை ஒன்று திரட்டும் நிகழ்வாக மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூ்ராட்சிமன்ற உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் என அனைவரும் இணைந்து இக்கூட்டத்தை ஏற்பாடுசெய்துள்ளோம். மேலும் கடந்த காலங்களில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்ட உறுப்பினர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அரசாங்க எதிர்பாளர்கள் அனைவரும் கிருலப்பனையில் நடைபெறும் மே தினக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்ததை ஊடகங்கள் மூலம் அறியக் கிடைத்தது. அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிப்பவர் என்றால் கிருலப்பனை கூட்டத்திற்குச் செல்லாது காலியில் நடைபெறும் கூட்டத்திற்கே செல்ல வேண்டும். அவர் ஒரு பிரபலமான தலைவர்தான். எனினும் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் அதிகாரம் அவருக்கு இல்லை. ஏனெனில் கட்சியின் வளர்ச்சிக்கு நாம் அவரின் பின்னால் நின்று செயற்பட்டுள்ளோம். 2005 மற்றும் 2010 ஆம் அண்டுகளில் நடைபெற்ற தேர்தலின் போது அவரின் வெற்றிக்காக பாடுபட்டோம். எனவே அவர் இப்போது கட்சியை இரண்டாக பிளவுபடுத்த முனைவாராயின் அதனை அங்கீகரிக்க முடியாது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர் கட்சியைப் பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களிலேயே ஈடுபட வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு என்றுமில்லாதவாறு கட்சியில் சிறந்த இடம் கிடைத்திருப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில்தான். ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ளவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொண்டு அவர்களுக்கே முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஒரங்கட்டப்பட்டனர். தற்போது அந்நிலமை மாற்றமடைந்துள்ளது. கட்சி உறுப்பினர்களுக்கு சிறந்த வகிபாகம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுகள் சிலவற்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆகவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நாம் அனைவரும் ஓரணியில் பயணிக்க வேண்டிய தேவையுள்ளது. அவ்வாறு செயற்பட்டால் 2020 ஆண்டளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதை எவராலும் தடுக்க முடியாது. 2020 ஆம் அண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் ஒரே தேர்தல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்தான். எனவே அத்தேர்தலுக்கு முன்னர் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்த எவராவது முனைவாராயின், அது ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் செயற்பாடாகவே அமையும். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பல குழுக்களாக பிரிந்து செயற்பட்டது. அதனால் ஆட்சியமைக்க முடியவில்லை. அக்குழுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் அக்கட்சியினால் தேர்தலில் வெற்றிபெற முடிந்தது.
இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அக்கட்சியை காட்டிக்கொடுப்பதுமில்லை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் அக்கட்சியை காட்டிக்கொடுப்பதுமில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமருக்கு பணிந்து செல்வதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அவ்வாறில்லை. ஜனாதிபதி சுயாதீனமாகச் செயற்படுகிறார். அதனால்தான் வற்வரி தொடர்பி்ல் அவர் உறுதியான முடிவினை வெளியிட்டார்.
எனவே இரு தலைவர்களும் தங்களின் கட்சிகளைப் பாதுகாத்துக்கொண்டு இலக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும் சுயநலம்கொண்ட ஒரு சிலரே கட்சினைப் பிளவுபடுத்துவதற்கு சூழ்ச்சி செய்துகொண்டிருக்கின்றனர். கட்சித் தலைவர் யார் என்பதை தீர்மானித்துக்கொண்டு பயணிப்பதை விட தலைவர் யாராக இருந்தாலும் அவருடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது. சுதந்திரக் கட்சியில் பிரிவினை பேசியது போதும். எனவே எதிர்வரும் மே தினக்கூட்டத்தை சிறந்த முறையில் நடத்துவதற்கு சகல உறுப்பினர்களும் கட்சித் தலைமையோடு ஒன்றிணைய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிக்கிறாரா இல்லையென்பது எதிர்வரும் முதலாம் திகதி தெரியவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.








