Breaking News

யாழ். குடாவில் 89 வீத வாக்குகள் பதிவான போது தோல்வி உறுதியானது - மஹிந்த



கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தவர் தனக்கு விருப்பமான பாதுகாப்புப் படையினருடன் ஹெலிகொப்டரில் சொந்த ஊருக்கு பயணிப்பதற்கு தான் சந்தர்ப்பம் வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

பி.பி.சி சிங்களச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்து அலரிமாளிகையிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி பதவியைத் தானே வகித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றிபெற்ற எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தான் தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும், எனினும் அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசிவிட்டு தான் சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தான் ஹெலிகொப்டரில் பயணிக்கும் தருணத்திலும் உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேற்றை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேர்தல் தினத்தன்று இரவு தான் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்கள் குருநாகலில் ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.


மேலும் தேர்தலில் தோல்வியடைந்தாலும் தொடர்ந்து அதிகாரத்தை தக்கவவைத்துக்கொள்ள தான் முயற்சித்ததாக மங்கள சமரவீர தெரிவித்த கருத்தையும் மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார்.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்த தான் தனது பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


யாழ். குடாநாட்டில், வடக்கில் 89 சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக அறிந்தவுடனேயே, தான் தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம் எனத் தெரிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை என கேட்டக் கேள்விக்கு பதிலளித்த அவர், வடக்கில் இந்தளவுக்கு வாக்குள் பதிவாகுமென தான் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.