Breaking News

காணாமல் போன ஊடகவியலாளருக்கு உதயன் இறப்புச் சான்றிதழ்!

கடந்த வாரத்தில் நினைவுகூரப்பட்ட உடகவியலாளர்
நினைவு நிகழ்வில் காணாமல் போயிருந்த வன்னி ஊடகவியலாளர் திரு தவபாலன் அவர்களை இறந்துபோன ஊடகவியலாளர்களுடன் இணைத்து அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. இதனை அவரது மனைவி கடுமையாக விமர்சித்துள்ளதோடு ஊடகங்களுக்கும் தனது மனவேதனையினை அனுப்பி வைத்துள்ளார்.

எங்கள் அன்புக்குரிய உறவுகளே,
வலிகளோடும் துயர்களோடும் ஏழு ஆண்டுகளாக பரிதவிக்கும் தி.தவபாலனின் மனைவியாகிய நான் எழுதிக்கொள்வது,
வன்னியின் இறுதிப்போரின்போது எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கை தொலைத்தவர்களாக இன்றுவரையில் அனாதரவான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
எங்கள் குடும்பத்தலைவராகிய தி.தவபாலன் அவர்கள் வன்னியில் இறுதிவரையில் ஊடகத்தில் பணியாற்றியவர் என்பது அனைவரும் அறிந்தவிடயம். போர் முடிவடைந்த நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக சிலர் சொல்லிக்கேள்விப்பட்டோம்.

அவ்வாறான நிலையில் அவர் மீண்டும் வருவார் என்கின்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு நாட்களையும் கடத்துகின்றோம். ஒரு குடும்பத்தில் நிகழ்கின்ற பிரிவின் வலியினை அனுபவித்தவர்களுக்கே உணரமுடியும்.

போருக்குப்பின்னர் என்னுடைய பிள்ளைகளை வளர்ப்பது உட்பட்ட எங்களுடைய குடும்ப சுமைகளை சுமப்பதில் பலத்த நெருக்கடிகளை இன்றுவரையில் சுமந்தே வருகின்றேன். ஆனால் எங்களுடைய தேடுதல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தின் ஊடகம் ஒன்று தங்களுடைய ஊடகவியலாளர்களுக்கு நினைவுக்கூட்டம் நடத்துதல் என்ற பெயரில் என்னுடைய கணவர் இறுதிப்போரில் இறந்ததாகத் தெரிவித்து அவருடைய ஒளிப்படத்தை வைத்து சுடரேற்றி மலர்மாலை அணிவித்து பத்திரிகையிலும் பிரசுரித்திருக்கிறது.

இவ்வாறான நடவடிக்கையால் மிகுந்த மன உழைச்சலையும் வேதனையையும் நானும் எனது பிள்ளைகளும் சந்தித்திருக்கிறோம். இவ்வாறான ஒரு முடிவினை அவர்கள் எந்த அடிப்படையில் மேற்கொண்டார்கள் என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது.

என்னுடைய கணவர் இறுதிப்போரில் உயிரிழந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை. அவர் தொடர்பில் நிகழ்வினை நடத்திய ஊடகம் எங்களிடம் கேட்கக்கூட இல்லை. இவ்வாறான அவர்களுடைய பொறுப்பற்ற நடவடிக்கை மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்ற எங்களை துயரத்தில் தள்ளுவதாகவே அமைந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் அமைப்புக்களிடம் முறையிடலாம் என்று எண்ணுகிறோம்.

சமூகத்துக்காக பொறுப்புடன் செயலாற்றவேண்டிய இவ்வாறான ஊடகங்கள் சுயலாப நோக்கில் செயற்படுவதாகவே எங்களால் எண்ணத் தோன்றுகிறது.
வலிகளோடு வாழ்ந்து வாழ்ந்தே மரத்துப்போன இதயங்களுடன் இருக்கும் எங்களுக்கு உரியவர்கள் உதவி செய்யாதுவிடினும் பறவாயில்லை துயரத்தைத் தரவேண்டாம் என்று வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.
திருமதி வசந்தி தவபாலன்.