Breaking News

பரணகம குழுவிடமிருந்து ஆங்கிலத்தில் கடிதம்? (கடிதம் இணைப்பு)



காணாமல் போனவர்களை தேடி கண்டறியும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு எனக்கூறும் நாடகக்குழுவிடம் இருந்து காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு ஆங்கில மொழியில் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விசாரணைகள், தேடுதல்கள் இடம்பெறுவதாக சிலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதங்களில் எழுதப்பட்டுள்ளதாகவும், சிலரது கடிதங்களில் விசாரணைகள், தேடுதல்கள் நிறைவுற்றது எனவும், நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்ள அந்தந்த பிரதேச செயலங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு எழுதப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் பரணகம ஆணைக்குழுவிடமிருந்து தமக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதங்கள் தமிழ் மொழில் எழுத்தப்படடிருப்பதாக தெரிவிக்கும் காணாமல் போனவர்களின் உறவினர்கள், தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதங்கள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டமை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடிதங்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. எனினும் ஏனைய மாவட்டங்களில் உள்ள காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதியாக இடம்பெற்ற பரணகம ஆணைக்குழு விசாரணையில் இவ்வாறான கடிதம் ஒன்று தமக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக குறித்த கடிதத்துடன் வருகைதந்த தாய் ஒருவர் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

இப்போது இவ்வாறான கடிதம் தமது அலுவலகத்தில் இருந்து அனுப்பிவைக்கவில்லை எனவும், இது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என பரணகம தெரிவித்ததுடன் தம்மிடம் இருந்த கடிதத்தை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக வேறு கடிதம் ஒன்றை எழுதி கையளித்ததாகவும் குறித்த தாய் தெரிவித்தார்.