Breaking News

பெரும் வலிகளைச் சுமந்த படைப்பாளிகள் உருவாகவேண்டும்! - முல்லையில் நடிகர் நாசர்

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பெரும் வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர இந்த மண்ணிலிருந்து ஒரு சிறந்த படைப்பாளி உருவாகவேண்டும் என்றால் அவர் ஈழத்திலிருந்தே உருவாகவேண்டும் எனத் தென்னிந்திய திரைப்படநடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான நாசர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஒரு படைப்புக்கு வலி என்பது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முத்தமிழ் கலை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழர்களது கலையை உலகிற்கு எடுத்துச் செல்வதைக் காரணமாகக் கொண்டே தனது இலங்கைக்கான பயணம் அமைந்துள்ளதாகவும், ஈழத்தின் கலையும் ஒருநாள் சர்வதேச அரங்கிற்குச் செல்லும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

தான் வடக்கு மண்ணில் கால்பதித்தபோது இங்கு வீசிய காற்றானது தனது தோலில் பட்டு கனத்து வீசியதாகவும், அதற்கான காரணத்தை உணர்ந்துகொண்டதாகவும் தெரிவித்ததுடன் வடக்கு மண்ணானது பல கனவுகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் காத்து நிற்கின்றதெனவும் தெரிவித்துள்ளார்.