ஜனாதிபதி இன்று பிரித்தானியா விஜயம்
ஊழல் ஒழிப்பு தொடர்பில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று பிரித்தானியாவிற்கு செல்கின்றார்.
நாளை மறுநாள் வியாழக்கழமை இடம்பெறவுள்ள ஊழல் ஒழிப்பு தொடர்பிலான சர்வதேச மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பல கலந்து கொள்ளவுள்ளன.
அந்தவகையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் அழைப்பின் பேரில் பிரித்தானியா செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள் நாட்டில் ஊழலை கட்டுப்படுத்த தேவையான நிபுணத்துவ ஒத்துழைப்புகளை பிரித்தானியாவிடம் கோருவார் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க ஊழல் ஒழிப்பில் ஒத்துழைப்புடன் செயற்படவும் பொதுவான பிரச்சணைகளின் போது சகோதரத்துவத்துடன் நேச நாடுகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கவும் இந்த மாநாட்டின் போது இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் வறுமை உள்ளிட்ட விடயங்களில் நேச நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் தேவை தொடர்பில் இந்த மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் வலியுறுத்த உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








