லைகா மொபைல் இன் பாரிய பண மோசடி : 19 பேர் கைது
சர்வதேச அளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் பிரான்ஸ் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிறுவனம் பல மில்லியன் பவுன் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
அதற்கமைய 09 பேர் பணமோசடி குற்றச்சாட்டிலும், 10 பேர் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் லைகா மொபைல் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவரான அலெய்ன் ஜோசிமெக்கும் (Alain Jochimek) ஒருவர் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வரி ஏய்ப்பின் அளவு 13 மில்லியன் பவுன்களுக்கும் அதிகம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு வழிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், சந்தேகத்துக்குரிய நிறுவனங்களிலிருந்து பல கோடி பவுன் பணம் லண்டன் தபால் நிலையங்கள் மூலம் பரிமாற்றப்படுவதைக் கண்காணித்துக் கண்டுபிடித்ததாகவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கடந்த 2011ம் ஆண்டு முதல் பிரித்தானியப் பிரதமரின் கட்சிக்கு 2.2 மில்லியன் பவுன்கள் நிதி வழங்கியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த நிறுவனம் தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டைகளை போலியான பற்றுச்சீட்டுக்கள் மூலம் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
உலகில் பாரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக திகழும் லைகா மொபைல் சர்வதேச அளவில் உள்ள தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவரான சுபாஸ்கரன் அல்லிராஜா (Subaskaran Allirajah) இங்கிலாந்தில் வசித்து வரும், இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.








