Breaking News

 ஒரே கல்லில் 2 மாங்காய்கள் விழுந்துள்ளது: விமல் குற்றச்சாட்டு


கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவமும் பல்வேறான சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது என்று கூறிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, இவ்விரு விடயங்களிலும் அரசாங்கம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். 

 நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்றுப் புதன்கிழமை நடத்தியஒன்றி ணைந்த எதிரணி, நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

முகாமில், படையினர் வெகுவாக இல்லாத நாளான, ஞாயிற்றுக்கிழமையன்று கொஸ்கம சாலாவ முகாமில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தையடுத்து, வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப் பெறதோன்றியுள்ளன அது ஒரு மாங்கா யாகும்.

இந்த சம்பவத்தை அடுத்து வெடித்துச் சிதறிய ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக விலை மனுக் கோரப்பட்டுள்ளது. இது இரண்டாவது மாங்காயாகும் என்றார். 

இதேவேளை, நாடாளுமன்றத்தில் ஒலிவாங்கிகள் செயலிழந்தமையால், நிதியமைச்சருக்கு எதிராக பொது எதிரணியினால் கொண்டு வரப்படவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை (இன்று) தினம் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இது ஒருமாங்காயாகும். செயலிழந்துள்ள ஒலிவாங்கிகளுக்கு பதிலாக புதிய ஒலிவாங்கித் தொகுதியை கொள்வனவு செய்வதற்கு விலைமனுக் கோரப்படலாம் அது இன்னொரு மாங்காயாகும்' என்றார்.