பொன்சேகாவுடன் ஒன்றாக அமர்ந்திருப்பது வருத்தமளிக்கிறது - ஜோன் செனவிரட்ன
முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகாவுடன் ஒன்றாக அமைச்சரவையில் அமர்ந்திருக்க நேரிட்டுள்ளமை வருத்தமளிப்பதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்….
அரசியல் பற்றி எந்தவிதமான அறிவும் அற்ற, தமக்கு உரிமையில்லாத விடயங்கள் பற்றி பேசி சமூகத்தில் பெரும் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டுள்ள சரத் பொன்சேகா போன்ற அமைச்சர் ஒருவருடன், அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருக்க நேரிட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது.
நான் வருந்துகின்றேன், சரத் பொன்சேகா தனக்கு சொந்தமில்லாத வேறும் அரசியல் கட்சிகளின் விவகாரங்கள் பற்றியும் கருத்து வெளியிடுகின்றார்.அவர் அனைவரையும் மிருகங்களின் பெயர்களைக் கொண்டே அழைக்கின்றார்.
நான் அட்டையைப் போன்று யார் மீதாவது ஏறி அரசியல் செய்வதாக சரத் பொன்சேகா குற்றம் சமத்தியுள்ளார்.
1989ம் ஆண்டு முதல் நான் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன். சரத் பொன்சேகாவிற்கு அரசியல் அனுபவம் போதவில்லை. யார் மீதும் ஏறி அரசியல் நடத்த வேண்டிய அவசியமில்லை.
இந்த அட்டை பற்றி கருத்து சரத் பொன்சேகாவிற்கு மிகவும் பொருந்தும் ஏனென்றால் அவர் கொழும்பில் 5000 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார்.எமது இலக்கு 2020ம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தை சுதந்திரக் கட்சியின் வசமாக்குவதாகும். எந்தவிதமான சூழ்ச்சித் திட்டங்களும் கிடையாது.
கோத்தபாய ராஜபக்சவை கட்சியில் இணைத்துக் கொள்வதன் மூலம் கட்சிக்கு புதுப் பொழிவினை வழங்க முடியும் என நாம் நம்புகின்றோம் என ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.








