வடக்கு மாகாண அமைச்சரின் இரட்டை வேடம்!
வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தில் வடமாகாண அமைச்சர் பா.சத்தியலிங்கம் இரட்டை வேடம் போடுவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைப்பது என முடிவாகியது.
இதற்கான அனுமதி கிடைத்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், வவுனியாவின் எந்த இடத்தில் பொருளாதார மையத்தினை அமைப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட விவசாயிகள் உள்ளிட்ட பலர் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என கோரி வந்த நிலையில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் செயற்பட்டு வந்தார்.
அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை வவுனியா, சிதம்பரபுரம் மக்களை குடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க தனக்கு பூரண விருப்பம் என தெரிவித்திருந்தர்.
அத்துடன், அதற்கான அனுமதி கிடைத்தால் தாம் ஆதரவு வழங்க தயார் எனவும், மத்திய அரசினால் தான் தாண்டிக்குளத்தை தெரிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், குறித்த நிகழ்வு முடிந்து 3 நாட்களின் பின் நடந்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையிலான கூட்டத்தில் ஓமந்தை பொருத்தமில்லை எனவும், தாண்டிக்குளம் தான் பொருத்தம் எனவும் அவர், கடுமையாக வாதாடி கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இவ்வாறு இருவேறு கருத்துக்களை கூறுவது இவரது இரட்டை முகத்தை வெளிப்படுத்துவதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேவேளை, ஓமந்தையில் அமைக்க மத்திய அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








