Breaking News

போராளியை ஊசி போட்டு கொன்றார்கள். – வெளிவரும் கொடூரங்கள்.



இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைனவர்கள் சுடப்பட்டார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது. ஊசிகள் போடப்பட்டன என நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் முன்பாக புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று சனிக்கிழமை ஒட்டுசுட்டானில் நடைபெற்றது. அந்த அமர்வில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு சாட்சியம் அளித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் வெள்ளைக்கொடியுடன் போனதற்கான ஆதாரம் நிறைய இணையங்களில் வெளிவந்துள்ளன. அதற்கான பல சாட்சியங்களும் இருக்கின்றன. அவர்கள் பயத்தில் கதைக்கின்றார்கள் அல்ல. கதைக்க போனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இலங்கை இராணுவத்திற்கு யுத்த தருமம் என்றால் என்ன என்பதனை போதிக்க வேண்டும். சரணடைந்தவங்களை சுடுவது நியாயம் அல்ல. ஏனெனில் அவர்கள் நிராயுத பாணியாக தான் சரணடைந்தவங்கள்.

நாங்கள் தடுப்பில் இருக்கும் போது எமக்கு இரசாயன உணவை தந்து இருக்கின்றார்கள். நான் தடுப்புக்கு போக முன்னர் நூறு கிலோ தூக்கிக் கொண்டு கிலோ மீற்றர் கணக்குக்கு ஓடுவேன். தடுப்பால வந்த பிறகு ஒரு பொருளை தூக்க முடியவில்லை. அத்துடன் கண் பார்வையும் குறையுது. இதில் இருந்து எங்களுக்கு ஏதோ நடந்து இருக்கின்றது என்பது எமக்கு தெளிவாக தெரிகின்றது.

தடுப்பில நாங்கள் இருந்த போது எமக்கு எல்லாம் தடுப்பு மருந்து ஏற்றினவர்கள். ஏதோ ஒரு ஊசி போட்டார்கள் எது என்ன தடுப்புக்கான ஊசி என எமக்கு தெரியாது. அந்த தடுப்பு ஊசி போட்ட போராளி ஒருவர் ஊசி போட்ட அன்றைய தினம் இரவே உயிரிழந்தார். என மேலும் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.