இலங்கைக்கு பொருத்தமான தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் : கனடா
இலங்கையின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், இலங்கை நடைமுறைக்கு சாத்தியமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துதல், குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பு கூறும் விடயம், என்பவற்றில் தேசிய அரசாங்கம், அர்ப்பணிப்புடன் செயற்படுவதை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் Shelley Whiting வரவேற்றுள்ளார்.
கனடா தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் சமாதானத்தை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், இன மத ஒடுக்குமுறைகள் இன்றி அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களும், வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பவும் சுபீட்சமான இலங்கையை உருவாக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கனடா, பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கூறினார்.








