ஜெனிவா விடயங்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் சுரேஸ்
ஜெனிவாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கருத்தானது, இராணுவத்தின் வசமுள்ள பல காணிகள் விடுவிக்கப்படாது என்ற விதத்தில் அமைந்துள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.
அண்மையில் வடக்கிற்கு சென்ற பாதுகாப்புச் செயலாளர்கூட 3000 ஏக்கர் காணிகள் இலங்கை படையினரின் தேவைக்கு வைத்திருப்பதாக கூறியதாகவும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களை இலங்கை அரசாங்கம் செய்யாதுள்ளதாக குறிப்பிடும் அவர், ஐ.நா தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் இழுத்தடித்து வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.
ஜெனிவாவில் பேசப்பட்ட விடயங்கள், அதன் உண்மைத்தன்மை மற்றும் நடைமுறைச் சாத்தியம் குறித்து கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் உரை குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.








