எல்லை நிர்ணயம் முடிந்த பிரதேசங்களில் உடனடியாக தேர்தலை நடத்துங்கள்
புதிய உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமைக்கு அமைவாக எதிர்வரும் மாதம் முதலாம் திகதிக்குள் எல்லை நிர்ணயம் முழுவதுமாக நிறைவ டைந்திருக்க வேண்டும் என நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கபேயின் தலைவர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய நிலையில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உள்ளுராட்சி தேர்தல் மட்டுமேயாகும். எனவே தேர்தல் நடத்தப்படுவது இன்றியமையாதது.
எல்லை நிர்ணயம் முழுவதுமாக நிறைவடைந்திருக்கின்ற இடங்களில் மாத்திரமாவது தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதன்படி நாட்டில் இருக்கின்ற 335, உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அவ்வமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் எந்த விதமான காத்திரமான கருத்துக்களையும் வெளியிடாமல் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமை நல்லாட்சி அரசாங்கத்துக்கான அடையாளங்கள் இல்லை.
எல்லை நிர்ணயம் நிறைவடைந்திருக்கின்ற பிரதேசங்களில் மாத்திரமாவது தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காகவும் பதவிக்காலம் நிறைவடைந்திருக்கின்ற நிலையிலும் தேர்தலை நடத்தாமல் மௌனம் காத்து வருகின்ற அமைச்சர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோருக்கு எதிராகவும் உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோரி நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தாக்கல் செய்துள்ளோம் என்றார்.