Breaking News

மூதுாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்



யுத்த காலத்தில் உயிர் இழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். 

இவர்கள் இன்று காலை மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும், நிரந்தர வாழ்வாதார உதவிகள் தமக்கு செய்து தருமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப்பிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கையளித்துள்ளனர்.

மூதூர் பிரஜைகள் குழுவின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்களின் தலைமையில் இடம் பெற்ற இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூதூர் தெற்கு பகுதியைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த 40ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்திடம் ஒப்படைத்த தமது பிள்ளைகள் எங்கே, அரசே எமது பிள்ளைகள் எப்போது திரும்பி வருவார்கள், அரசே ஐ.நா.பரிந்து நிறைவேற்று, எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது, போன்ற வாசககங்களை ஏந்தியவாறு இவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.