Breaking News

பாத யாத்திரை செல்லும் எம்.பி.க்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும்

பாத யாத்திரை செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் பாத யாத்திரை செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து, நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்படும்.

கூட்டு எதிர்க்கட்சி எனக் கூறிக்கொண்டு இந்த தரப்பினர் கட்சிக்கு செய்யும் அழிவுகளை தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ள முடியாது. சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்க இந்த நபர்களை நீக்கி அதற்காக புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச வேறும் தரப்பினரின் தேவைக்கு அமைய கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கின்றார். கட்சிக்கு எதிராக செல்லும் இந்த துரோகப் பயணம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஊழல் மோசடிகள், கொள்ளைகள் மற்றும் களவுகளை மூடி மறைப்பதற்காகவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது. மஹிந்த தரப்பினர் செய்த குற்றச் செயல்கள் பற்றி மக்களுக்குத் தெரியும். மஹிந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

மஹிந்த தரப்பினரின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.