Breaking News

காணாமல்போனோர் பணியகம் இலங்கைக்கு ஏற்றதல்ல – தயான் ஜெயதிலக



காணாமல் போனோருக்கான பணியகம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள மாதிரி வரைவு சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல என்று, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு. அதன் படைகள் பயங்கரவாத இயக்குத்துக்கு எதிராக சட்டபூர்வமான போரை நடத்தி, அதில் வெற்றிக் கண்ட நாடு.

இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே இந்த காணாமல்போனோருக்கான பணியகங்கள் அமைக்கப்பட்டன.

சிறிலங்காவில் காணாமல்போனோருக்கான பணியகம் தொடர்பிலான மாதிரி வரைவை மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டிருப்பது பொருத்தமானதல்ல.

ஆசியாவின் எந்த நாட்டிலும் போருக்குப் பின்னர், இதுபோன்ற காணாமல்போனோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை நிறுவப்படவில்லை. ஜனநாயக நாடான ஸ்பெயினில் கூட இப்படி நடக்கவில்லை.

அறம் சார்ந்த மனிதாபிமானம் என்ற வகையில், காணாமல்போனோர் தொடர்பான தேடல் மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவால் செய்யப்பட்டுவிட்டது.

இதில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் இந்த ஆணைக்குழுவின் பணியை புதுப்பித்து அல்லது மாற்றியமைத்து பணியை முன்னெடுக்கலாம்.

ஆனால், மங்கள சமரவீர பேசும் காணாமல்போனோருக்கான பணியகம் தொடர்பாக, எந்த தர்க்க சிந்தனைகளையும் காணவில்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.