இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க ஜெனீவால் ஒன்றிணையும் புலம்பெயர் சமூகம்
ஐ.நா மனித உரிமை பேரவையின் 33ஆவது கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களினால் தமிழர்களுக்கு நீதி வேண்டி பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய போராட்டங்கள் மற்றும் இராஜதந்திரிகளுடனான சந்திப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஜெனீவாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகும் மனித உரிமை பேரவையின் 33 அமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இலங்கையில் காணாமல் போதல்கள் பற்றிய ஐ.நா செயற்குழுவின் அறிக்கை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்போது, ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, ஐ.நா பரிந்துரைகள் குறித்து பதிலளிக்கவுள்ளார்.
இந்த நிலையிலேயே, குறித்த அமர்வுக்குப் புறம்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து, தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளதுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.