4 மீனவர்களையும், 114 படகுகளையும் மீட்க வேண்டும்: வாசன்
இந்திய மத்திய அரசு இலங்கையின் வசம் உள்ள தமிழக மீனவர்களையும், 114 விசைப் படகுகளையும் மீட்பதற்கு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ´´தமிழகத்தின் கடலோரப் பகுதியில் இருந்து நடு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்ற மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் செல்வதும், மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசும் தமிழக மீனவர் பிரச்சினையில் அலட்சியப்போக்கை கடைப்பிடிக்கிறது. இலங்கை அரசும் அந்நாட்டின் கடற்படை மீது இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது குறித்து மத்திய அரசு இலங்கை அரசோடு கண்டிப்போடு பேச வேண்டும்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையால் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் அராஜகச் செயலை மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து குரல் கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் தங்களது வேதனையையும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய பாஜக அரசு மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கிறது.
எனவே, இலங்கை வசம் உள்ள 4 தமிழக மீனவர்களையும், தமிழக மீனவர்களின் 114 படகுகளையும் மீட்பதற்கும், சேதமடைந்த 18 படகுகளுக்கு முழு நிவாரணம் பெற்றுத்தருவதற்கும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையே அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று சுமூகத் தீர்வு எட்டப்படும் வரை இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு இலங்கைக்கு உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்.
மேலும் தமிழக மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்கு உண்டான ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தி தருவதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு விரைவில் நல்ல தீர்வு ஏற்படுத்தி கொடுப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்´´ என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்