தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த கோரி மோடிக்கு மகஜர்
கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி இலங்கை தமிழர்கள் சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மகஜர் ஒன்றை கையளிக்க 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக தீர்மானித்துள்ளன.
காவிரி நதி நீரை தமிழகத்திற்கு வழங்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்த தாக்குதல்கள் குறித்து இலங்கை தமிழரசு கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடுதலை கூட்டணி, ஈ.பி.டி.பி, ரெலோ, தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகிய 7 கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று மாலை 6.30 மணி தொடக்கம் 8.30 மணி வரையில் கூட்டாக இணைந்து கலந்துரையாடியிருந்தன.
தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக்கோரி இந்திய பிரதமருக்கு கோரிக்கை மகஜர் ஒன்றை கையளிப்பதென குறித்த ஏழு கட்சிகளும் இந்த கூட்டத்தில் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய கர்நாடகவில் தமிழர்கள் தாக்கப்படுவதை நிறுத்தகோரியும், தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதை நிறுத்த கோரியும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.
இதற்கமைய இன்று மாலை 7 மணிக்கு யாழ்.இந்திய துணை தூதுவர் நட்ராஜனிடம் 7 கட்சிகளினதும் பிரதிநிதிகள் கூட்டாக மகஜரை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.