Breaking News

ஐ.நா கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; கடும் பாதுகாப்பு

ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர், இன்று 19ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். இந்தக் கூட்டத்தொடரில், கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) முற்பகல் 10:45க்கு, எமிரேட்ஸ் விமானத்தில் நியூயோர்க் பயணமானார். 

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரானது, இன்று முதல் இம்மாதம் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் புதன்கிழமையன்று (21) பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார். தற்போதைய ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கலந்துகொள்ளும் இறுதிக் கூட்டத்தொடராக இக்கூட்டத்தொடர் அமையவுள்ளதுடன், அவர் தனது பிரியாவிடை உரையையும் ஆற்றவுள்ளார். 

ஜனாதிபதியுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொலனே உள்ளிட்டோரும் பயணமாகியுள்ளனர். 

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள மன்ஹட்டன் நிர்வாகப் பகுதியிலுள்ள செல்சி என்ற இடத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில், குறைந்தது 29 பேர் காயமடைந்திருந்தனர். இந்தச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு, ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக உலக நாட்டு தலைவர்கள் நியூயோர்க்குக்கு விஜயம் செய்துள்ளமையால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.