Breaking News

சீன- இலங்கை உறவுகளை வலுப்படுத்த இருநாடுகளின் தலைவர்களும் உறுதி

அணை மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில், இருதரப்பு நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை  மேலும் வலுப்படுத்துவதற்கு சீன, சிறிலங்கா தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


கோவாவில் நடைபெறும் எட்டாவது  பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு இருதரப்புப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

இந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட சீன அதிபர், சிறிலங்கா –சீன உறவுகள் சாதகமான நிலையில்  ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து வருவதாகவும், தலைமுறைகளைக் கடந்து நிற்கும் சிறிலங்காவுடனான பாரம்பரிய நட்புறவை முன்னகர்த்துவதற்கு சீனா பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளும் உயர்மட்ட தொடர்புகள் மற்றும் அரசியல் தொடர்பாடல்களை பேணி வருவதாகவும், பரஸ்பரம் கரிசனைக்குரிய விவகாரங்களில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருவதாகவும் சீன அதிபர் கூறினார்.

அணை மற்றும் சாலை கட்டுமானத் திட்டத்துக்கு சிறிலங்கா ஆதரவளிப்பதற்கு சீனாவின் சார்பில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வர்தகம், துறைமுக இயக்கம், உட்கட்டமைப்பு  கட்டுமானங்கள். துறைமுகங்களை அண்டிய கைத்தொழில் பூங்காக்கள், உற்பத்தி ஆற்றல் மற்றும் வாழ்வாதார துறைகளில் இருநாடுகளுக்கும் இடையில் ஆழமான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் சீன அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற  பாரிய கூட்டுத் திட்டங்களை இருதரப்புகளும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா, சமுத்திரம், பாதுகாப்பு, மற்றும் அனர்த்த தயார் நிலை, மற்றும் குடிவரவு ஆகிய துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன் அனைத்துலக மற்றும் பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீன அதிபர் கோரிக்கை விடுத்தார்.

இந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேன, சிறிலங்காவின் அபிவிருத்திக்கும், அனைத்துலக அரங்கிலும் சிறிலங்காவுக்கு சீனா அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

பாரிய திட்டங்கள் உள்ளிட்ட சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உடன்பாடுகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கும் சிறிலங்கா அதிபர் விருப்பம் வெளியிட்டார்.

சிறிலங்காவில் சீன தொழிற்துறையினரின் முதலீடுகளையும் அவர் வரவேற்றுள்ளார்.