Breaking News

பிரபல தமிழ் இணையத்தளம் ஒன்று இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது!



வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளது.

ஊடகத்துறை மற்றும் நீதி அமைச்சுக்களின் முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் சிறிலால் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நீதித்துறையின் முடிவுகள் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிபதிகள், சட்டவாளர்கள் குறித்து அவதூறான செய்திகளை வெளியிடுவதாகவும், வடக்கில் பொதுமக்களைத் தூண்டி விடும் வகையில் செயற்படுவதாகவும், இந்த இணையத்தளம் மீது முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட இணையத்தளம் சிறிலங்கா ரெலிகொம் இணைய வழி சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு ஆகியன மேற்கொள்ளும் விசாரணைகள் முடியும் வரை இணையத்தளம். தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தடை செய்யப்பட்ட முதல் இணையத்தளம் இதுவாகும்.