Breaking News

உயிரிழந்த மாணவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு வடமாகாண சபையில் வலியுறுத்தல்!



பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் அரசாங்கம் ஒருகோடி ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என்று வடமாகாண சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 64ஆவது அமர்வு இன்று காலை 9.30 அளவில் யாழ்ப்பாணம் – கைதடியிலுள்ள வடமாகாண கட்டிடத்தில் கூடியது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றிருப்பதால் சபைக்கு அவைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம் தலைமை தாங்கினார்.

மாகாண சபை பொதுப் பணிகள் ஆரம்பமாகிய போது சபையில் எழுந்த உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கும் ஒருகோடி ரூபா நட்டஈட்டை அரசாங்கம் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதன்போது சபையில் கூடியிருந்த அனைத்து உறுப்பினர்களும் எழுந்துநின்று இந்தக் கோரிக்கையின்படி அரசாங்கம் குறித்த மாணவர்களது குடும்பத்தினருக்கு நட்டஈட்டை வழங்க வேண்டும் என்று ஏகோபித்த மனதுடன் வலியுறுத்தினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும், அரசாங்கத்திடம் இதனை முன்வைப்பதாகவும் சபைக்கு தலைமை தாங்கிய அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.