இராணுவப் புரட்சி ஆபத்து உள்ளதா?
இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த 12ஆம் திகதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் விளைவாக, தற்போதைய கூட்டரசாங்கம் எந்தளவு காலத்துக்கு நிலைத்து நிற்குமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஜனாதிபதியின் கருத்து, அவரை ஆட்சி பீடத்தில் ஏற்றிய தரப்புகளைக் கடும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது.
ராஜபக் ஷ குடும்பத்தினர் உள்ளிட்ட, முன்னைய ஆட்சியில் இருந்தவர்களை பாதுகாக்க முற்படுகிறாரா என்ற சந்தேகத்தை பகிரங்கமாக எழுப்பும் நிலையை ஜனாதிபதியின் கருத்து ஏற்படுத்தியிருக்கிறது. ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளிலிருந்து ராஜபக் ஷ குடும்பத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறாரா என்ற கேள்வி, எழும்பியுள்ளமையானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு ஆண்டுகால செயற்பாடுகளுக்கும் விழுந்த பேரிடியாகவே கருதப்படுகிறது.
இதுவரை கட்டிக் காப்பாற்றப்பட்ட பெயர் கெட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தை ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இந்தச் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.
அதனால்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் அந்த உரைக்கு புதிய விளக்கங்களைக் கொடுக்க முனைகின்றனர். ஊடகங்கள் சரியாக அந்த உரையைப் பதிவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர்.
கோத்தாபய ராஜபக்க்ஷ மீது தொடரப்பட்டுள்ள விசாரணை தொடர்பாக தாம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும், முன்னாள் கடற்படை தளபதிகள் மீதான விசாரணை குறித்தே தாம் கருத்துக்களை வெளியிட்டதாகவும் ஜனாதிபதி நியாயப்படுத்தியிருக்கிறார்.
முன்னாள் படைத் தளபதிகளின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக அவர்கள் மீதான விசாரணைகளை நடத்தக் கூடாது என்று கூறவில்லை என்றும் குழப்பமான கருத்துக்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
முப்படைகளினதும் தளபதியாக இருக்கும் தனக்குத் தெரியப்படுத்தாமல் விசாரணைகள் நடத்தப்பட்டது குறித்தே தாம் விசனம் வெளியிட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னாள் படை அதிகாரிகளின் கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், ஒரு முன்னாள் இராணுவ லெப்.கேர்ணல் அதிகாரியான கோத்தாபய ராஜபக் ஷவுக்கும், முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோவுக்கும், அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதிக்கும் பொருந்தக்கூடிய கருத்துத்தான்.
அவர்களை விட்டு விட்டு முன்னாள் கடற்படைத் தளபதிகளின் சார்பில் மாத்திரம் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருக்க முடியாது. எனவே, கோத்தாபய ராஜபக் ஷவை பாதுகாக்க முனையவில்லை என்ற அவரது கருத்து நியாயமற்றது.
முன்னாள் படை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தக் கூடாது என்று கூறவில்லை, தனக்குத் தெரியப்படுத்தி விட்டு விசாரிக்கவில்லை என்று ஜனாதிபதி ஆதங்கப்பட்டிருப்பதும் ஆச்சரியத்துக்குரியது. அவ்வாறு தெரியப்படுத்திவிட்டு விசாரணை நடத்தப்பட்டிருந்தால் மாத்திரம், முன்னாள் கடற்படைத் தளபதிகள் உள்ளிட்ட முன்னாள் படை அதிகாரிகளின் கௌரவம் பாதுகாக்கப்பட்டிருக்குமா?
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை, படை அதிகாரிகளினது கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும் அப்பாற்பட்டதாகவே தோன்றுகிறது.
அதேவேளை, கடந்தவாரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்களுக்கான அடிப்படை இராணுவப் புரட்சி தொடர்பான அச்சமே என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
நல்லாட்சியைப் பலப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளால் எரிச்சலடையும் மஹிந்த- -கோத்தாபய ராஜபக் ஷ தரப்பு, இராணுவப் புரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கும் செல்லக் கூடும் என்ற அச்சத்தையும் அவர் வெளியிட்டார்.
இராணுவத்தினரை சிறையில் அடைப்பதாகவும், சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப் போவதாகவும் மஹிந்த தரப்பினர், சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வதையும், பேரணிகள் நடத்துவதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதனால்தான், இராணுவப் புரட்சியொன்றுக்கு இட்டுச் செல்லும் ஆபத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மத்தியில் மாத்திரமன்றி, இராணுவத்துக்குள்ளே கூட, ராஜபக் ஷவினருக்கு ஆதரவான அதிகாரிகளும் படையினரும் ஏராளமாக உள்ளனர்.
இத்தகையதொரு ஆபத்தைக் கருத்தில் கொண்டுதான், இராணுவ உயர்மட்டப் பதவிகளுக்கு நியமனங்களைச் செய்யும்போது வடிகட்டல் நடைமுறையை அரசாங்கம் கையாண்டு வருகிறது.
தற்போதைய இராணுவத் தளபதிக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டு, ராஜபக் ஷவினருக்கு ஆதரவாகச் செயற்படக் கூடிய அதிகாரிகள் உயர் பதவிக்கு வந்துவிடாமல் தடுக்கப்பட்டு இராணுவக் கட்டமைப்பில் இருந்து படிப்படியாக வெளியேற்றப்படுகின்றனர்.
இந்த அரசாங்கம் மாத்திரமன்றி கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்தனவும், 1987ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி ஏற்படலாம் என்று அஞ்சினார்.
2009ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, ஜெனரல் சரத் பொன்சேகாவினால் அத்தகையதொரு புரட்சி ஏற்படுத்தப்படலாம் என்று இந்தியாவிடம் உதவி கோரியிருந்தார்.
அதேபோன்று மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே இராணுவம் தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன்தான் செயற்பட்டு வருகிறது. இராணுவத்தினர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தாமல் நாசூக்காகவே எல்லாவற்றையும் கையாள்கிறது.
வடக்கில் படைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பு போன்ற விடயங்களில் இராணுவத்துடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளாமல் தான் விடயங்களைக் கையாள்கிறது.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் விடயத்திலும் படையினரை விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை என்பதையே அரசாங்கம் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது.
இராணுவத்தினரைத் திருப்திப்படுத்துவதற்காகவும், அவர்களால் ஆட்சிக்கு ஆபத்தேற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், அரசாங்கம் கையாளும் இந்த உத்தி, தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தையும் அரசாங்கத்தின் மீது சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அதைப் பொருட்படுத்தாமல், இராணுவத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில், இராணுவப் புரட்சி ஒன்றுக்கு இட்டுச் செல்லலாம் என்ற அச்சத்தில், படைத் தளபதிகள் மீதான விசாரணைகளை அரசாங்கமே தடுக்கவோ முடக்கவோ முனைந்தால், அது இராணுவத்தினருக்கு ஊக்கத்தைத் தான் அதிகரிக்கச் செய்யும்.
அரசாங்கம் தம்மைக் கண்டு அஞ்சுகிறது என்பதை இராணுவம் கண்டு கொண்டால், இன்னும் இன்னும் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலை உருவாகும்.
குறிப்பாக உயர்பாதுகாப்பு வலய விவகாரங்கள், காணிகள் விடுவிப்பு, படைகள் குறைப்பு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளில் அரசாங்கத்தின் பிடி முற்றாகவே தளர்ந்து போகும்.
அது தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்து விடும். இது அரசாங்கத்துக்கு தெரியாத விடயமாக இருக்க முடியாது.
ஆனாலும், அரசாங்கம் இராணுவத்தைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமையைக் கொடுத்து வருகிறது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் மாத்திரமன்றி, போர்க்கால மீறல்கள் விடயத்தில் தான் படையினரைப் பாதுகாப்பதில் அரசாங்கம் மிகவும் உறுதியாக இருக்கிறது.
போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக படையினர் மீது எத்தகைய விசாரணைகளையும் நடத்த விடமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக ஐ.நாவுக்கும், நாடுகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதப் போவதாக அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கடந்தவாரம் தகவல் வெளியிட்டிருக்கிறார். இராணுவத்தினர் செய்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும், ஆனால் தண்டனை விதிக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
இதற்குப் பெயர்தான் தண்டனையிலிருந்து தப்பிக்கும் – தப்பிக்க வைக்கும் கலாசாரம். மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் இந்த தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உச்சத்தில் இருந்தது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கமும் அந்தக் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறது. அதுவும், வெளிப்படையாகவே அதனை அச்சமின்றிக் கூறுகிறது.
படையினரின் குற்றங்களை விசாரிக்க முடியும் தண்டிக்க முடியாது என்றால் எதற்காக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்? நீதி என்பது குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கானதே தவிர, குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கானது அல்ல.
தற்போதைய அரசாங்கத்தின் நீதி, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நீதியாக இருக்கப் போகிறது என்பதைத் தான் ஜனாதிபதியின் நிலையும், ராஜித சேனாரத்னவின் கருத்தும் எடுத்துக் கூறுகின்றன.
இது சிங்கள பௌத்த மேலாதிக்கவாதச் சிந்தனையின் வெளிப்பாடேயாகும். அதனை மறைப்பதற்காகத்தான் இராணுவப் புரட்சி பற்றிய அச்சத்தை அரசாங்கம் காரணமாக்க முனைகிறது.
-சத்திரியன்-
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்