Breaking News

யாழ், அரசடியில் வாள்வெட்டு : ஐவர் அடையாளம் காணப்பட்டனர்

யாழ்ப்பாணம் அரசடி வீதியிலுள்ள கடையொன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இளைஞர்கள் கடையொன்றில் பணியாற்றிய இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன், கடைக்கும் தீயிட்டமை தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த கடையினூள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமரா பதிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் அரசடி வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த முகமூடி அணிந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு 7.15 அளவில் கடைக்குள் புகுந்த குறித்த நபர்கள் இரு இளைஞர்களை வாளால் தாக்கியதுடன், கடைக்கும் தீயிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயடைந்த 24 வயதான கஜலக்சன் மற்றும் 20 வயதான அஜித் என்ற இளைஞர்கள், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வருகைதந்து தீயை கட்டுப்படுத்தியதுடன், இது குறித்து பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ள போதிலும், தாக்குதலை நடத்தியவர்கள் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தாக்குதலை மேற்கொண்டவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் இலக்கங்கள் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதுடன், இதனை அடிப்படையாக வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.