கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்;நாடாளுமன்றில் இன்று பிரேரணை
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளது.
கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் மீள்குடியேற்றத்திற்குத் தடையாக அமைந்துள்ள அரச படையினரை அங்கிருந்து அகற்றி அப்பாவி மக்களின் காணிகளை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த பிரேரணையை கூட்டமைப்பு முன்வைக்கவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இந்த பிரேரணையை சபையில் முன்வைத்து இன்று உரையாற்றவுள்ளார்.
கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது அகிம்சை வழியிலான நிலமீட்பு போராட்டத்தை 9ஆவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் இதுவரை அவர்களுக்குரிய தீர்வு கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்விலும் பிலவுக்குடியிருப்பு மக்களின் பிரச்சினை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சபைக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினமும் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிப் பிரச்சினை பேசப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








