மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் புனிதஸ்தலங்களாக மாற்ற கோரிக்கை!!!
மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் புனிதஸ்தலங்களாக மாற்ற மாவட்ட அபிவிருத்தி குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் முன்வைத்துள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரின் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
வடக்கில் உள்ள பல்வேறு மாவீரர் துயிலும் இல்லங்களை வடமாகாண சபையூடாகவும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களினூடாகவும் புனிதஸ்தலங்களாக மாற்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனிதஸ்தலங்களாக மாற்ற இந்த அபிவிருத்தி குழுவிடம் கோரிக்கையினை முன் வைக்கின்றேன்.
ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுபூர்வமான மண்ணாக குறித்த மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றது.
எனவே உணர்வு பூர்வமாக குறித்த மாவீரர் துயிலுமில்லங்களை புனிதஸ்தலங்களாக மாற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு அங்கீகாரம் வழங்க வேண்டும். இதன் போது மக்கள் சுதந்திரமாக சென்று அஞ்சலி செலுத்த முடியும்.
எனவே மாவட்ட அபிவிருத்தி குழு எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார்.
இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட மாவட்ட அபிவிருத்திக்குழு உரிய அதிகாரிகளுக்கு மாவீரர் துயிலும் இல்லம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், ஜனாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் பிரபா கணேசன் ஆகிய பலரும் கலந்து கொண்டுள்ளனர்.